Friday, December 14, 2012

கவிதை


பொட்டல் 


 மேளம் ஒன்றுதான் எனினும் 
  தாளம் வேறாகிப் போகிறது!
 மலர் மாலைகள்  எனினும் 
 மணக்க மறுக்கின்றன!
 உற்றவர் உடனிருந்தபோதும்   
 உலகம் சுளியமாய்த் தெரிகிறது!
அழையாமல்வந்தவரை 
 'வா'  என விளிப்பதா?
 வந்தவர்  விருந்தினரா,
இல்லை,  வருந்துநரா? 
புரிந்ததெல்லாம் புதிராக, 
புலப்படுவதெல்லாம் புகையாக...
பகையெல்லாம்  நட்பாக...
 சிரிக்காமல் சிரிப்பவர்கள் 
என்முன்  நிற்பவர் மட்டுமா,
 எமனும்தானா?
லட்சம்பேர்  கூடுபவர் மட்டும்தான் 
லட்சியக்காரர்களா!
பல்லவராஜாவிற்கு மட்டும்தானா 
பல்லக்கு, பாமரனுக்கு இல்லையா!
 இருக்கும்வரை  தாக்கித்    திரிந்தவர்கள் 
இறந்தவுடன் தூக்கத் தயாராய் !
  
பூமிக்கே புத்திவந்ததுபோல் 
கூடியவர் அத்துணை பேரிடமும் 
உண்மைச் சத்தங்கள்,

எரியும் தீயில்  எரிந்துபோகின்றன 
புரிந்த உண்மைகள் அனைத்தும்,,
அனைவருக்கும்.
ரெட்டவயல் எஸ் கிருஷ்ணசாமி 


    தந்திரம்
"சந்திரனுக்குக்   கூட
எந்திரத்தை அனுப்பிவிட்ட
இந்தியாவுக்குச் சரக்குச்
சாமான் விக்க 
சீமைக்காரந்தான் 
வேணுங்கிறது 
தந்திரந்தானே!
மாற்றம்
 நேற்று ஏமாற்றியவன்
இன்று இல்லை,
பிறிதொருவன் என்பதே ....
உறவு 
மரத்திற்கும் வேருக்கும்
உள்ளதல்ல மனித உறவு
கிளைகளுக்கும் கனிகளுக்குமிடையே
உள்ள உறவு.
 அழுகையும் சிரிப்பும்
முகத்தின் கடமை
அனைத்தும் அகத்தின்
பிரதிகள்  என நம்புவது மடமை
பணமும் பொருளுமே
இங்கு பொருளுள்ளவை
பாசமும் நேசமும் வெறும்
வேஷங்களின் வெளிப்பாடு
அம்பானி குடும்பத்தில் கூட
அடுக்களை ரெண்டனும்போது
அன்றாடம்காய்ச்சிகள் எப்படி
அன்றில் பறவையென இருப்பர்?
புத்தனை தெரியாதோர்
இங்கு யாருமிலர்,
புத்தனை தெளிந்துகொள்ளவும்
இங்கு யாருமிலர்.
பூமியை தாங்குவதாகவே
பூமியோர் நம்புகின்றனர்
பூமி தாங்குவதை
நினைக்கவும் மறுக்கின்றனர் ,
நெடுந்தொடர் நாடகங்களுக்கு
நீலிக்கண்ணீர் வடிக்கும்
நில மாந்தர்கள்
காட்சி மாறியதும்
கட்சி மாறிவிடுகின்றனர்.
சிலருக்கு நடிப்பென்பது ஒரு
தொழில்: மற்றவருக்கு 
அதுவே வாழ்வு 
பூச்சியங்கள் எத்தனை
என எண்ண இயலாதபோது 
இழப்பு  பூச்சியமே என்றதை
மறக்கமுடியுமா?
அட்டைபூச்சிகள் அலுவலகம் 
சென்று வேலைபார்க்க இயலா,
உறிஞ்சுகின்றன...
ஆறறிவு படைத்த மனிதன்...?  


உழவன்
உழும் அவன் எழுவதற்கு
எத்தனை  யுகங்களாகுமோ!
அழும் அவன் குரல்
கேட்க எவரும் இல்லையே!
உண்ணும் அனைவரும்
உள்ளிட்டாலே அவன்
துக்கம் போக்கிடலாம்!   
மண்ணும் மரமுமே 
மண்ணாய்ப் போனபின்
எண்ணுவதிற்கு இங்கு 
எவருளர்?   
கணினியை வைத்தே 
கலப்பையை இழுக்க 
 யூகம் செய்கிறார்,
கணினித் திரையிலேயே 
கத்திரித் தோட்டமிட்டு
கறிகள் சமைக்கிறார்!
  விவசாயம் வெளுத்தது சாயம் ,
  விளைநிலங்களெல்லாம்    மாயம்,          
 வேண்டாம் இனி எலிப்பொறி
 கோடிகளில் கொட்டுது கணிப்பொறி
                        அளந்து கொடுத்துவிட்டு
                        அள்ளிச் செல்வோம் வா!
                 சோறுடைத்த சோழ நாடெல்லாம்
                 சோளிங்கநல்லூராகட்டும்!
மாடுகட்டும் இடமெல்லாம் 
வீடுகட்ட விடுவோம், 
மந்தைவெளி எல்லாம் 
சந்தைவெளி ஆகட்டும்! 
பூவோ, காயோ
பூத்திடாத இடங்களைக்கூட    
'பூங்கா' எனப் பெயரிட்டு
பெருமிதம் கொள்வோம்.
கழனியைத் தொலைத்து
கணினியைத்  தேர்வு செய்வோம்!
கழுத்துகட்டி வேண்டாம் நம்
காளைகளுக்கு ...
அணிவிப்போம் அவற்றை நம்
மென்பொருள் மின்னல்களுக்கு
குழாய் போட்ட குழந்தைகள்
குவலயம் முழுமையும்...
குலவை போடக்கூட
கிடைத்திலர்     கொட்டிக்குடுப்பினும் ,
ஆட்டுப்பாலும், ஆவின்பாலும் 
இணையதளங்களில் இருந்தால் உண்டு!
சாமந்திப்பூவும், மல்லிகைப்பூவும்
இனி வலைப்பூக்களில் மட்டும்தான்!
கூறு போடு, கூறு போடு! 
 சோறு போடும் காடு-
 கழனியை கூறு போடு!
கட்டிடங்களாக்கு!
அழைப்பு மணிக்குக்கூட 
எழுந்திடாமல் அறைக்குள் 
புதைந்திடு!
சின்னத்திரையும் கணினித்திரையும்
உன் கண்களை மறைக்கட்டும்!
சுண்டெலி வலையில் சிக்கிட்ட
உனக்கு சாபல்யம் ஏது இனி?
 கவிஞர் ரெட்டவயல் எஸ் கிருஷ்ணசாமி
சென்னை
நேர்மை? 
'அம்மணம்'  என்பதை அனைவரும்
அறிந்ததே எனினும்
'அறிவிலியே!' அவன் 
அணிந்துள்ள  தோலாடையை 
பார்க்க இயலாக்குருடன்  'நீ'   
என என்னை விளம்புகிறார்!
        
              ஊழல் தேசம்!
             'நான் மட்டும் சரி'
             என நாடே சொல்லும்போது 
             நம்   நாடு எப்படி   ஊழல்
              தேசமாகும்?   
           
                 சாவு 
 சாவில்லாச் சீவன்
இச்சாவெனத் தெரிந்தும்
சாவிக்கொத்து வைத்துள்ளவன் 
மட்டும் 'விலக்களிக்கப்பட்டவன்' 
என வீராப்பில் இருக்கிறான்.
                             பூ
காதல் மற்றும் கவிதை
போதையர் பிறர்
காதில் சுற்ற உதவும்
இயற்கைக் கொடை 
           அம்பானி
பாதாளக்காற்றையும்
ஊற்றையும் விற்று  
ஆகாயக் கூட்டில்  
வசிக்கும் வானம்பாடி
பங்குச்சந்தைப் பகலவனுக்கு
குடும்பச்சண்டயைத் தீர்க்க
ஒரு வீட்டுக்குயில்,
நட்சத்திரங்களுடன் போட்டியோ!
இருந்து எழ இல்லம் இல்லாதோர் 
மத்தியில் இருபத்தி   ஏழு 
மாடியில் ஓர்  எஹுக் கோட்டை 
                    
காட்டாட்சி
அடர்ந்து படர்கிறது வனம்
தொடர்ந்து பட படக்கிறது மனம்
ஆளில்லா  ஆரண்ய காண்டத்தில் 
புள்ளினங்கள் மட்டுமே நிதர்சனம் 
நெடுந்து படர்ந்து நெஞ்சின் மேல் 
விழும் கொடியில் நஞ்சில்லை 
காலைத் துளாவிச் செல்லும்
காட்டுப்பூச்சிகளிடத்தே 
வன்மம் இல்லை
இன்னதுதான் உருவம் 
என  தெரியாத உயிரனங்கள்-
இயல்பாக வாழ்க்கை 
இரவுக்கும் பகலுக்கும்
அங்கே இடைவெளியில்லை
உண்மை-பொய்
என்ற பேதமுமில்லை
இயல்பு அவற்றின் சால்பு
பஞ்சாயத்துக்கு பத்துபேரோ
பறிப்பதற்கு பதர்களோ 
அங்கு இல்லை 
பசிக்குப் புசித்து
பாங்காய் திரிகின்றன 
மானிடமற்றோர்.
பாதைகள் தேசிய 
நெடுஞ்சாலைகள் அல்ல
ஆனால் பயமேதுவும் இல்லை 
யானைகளும் எறும்புகளும்
ஒரே வீட்டில்- வித்தியாசமின்றி...
குதிரைகள்   வரிகளால் வித்தியாசப்படினும்
வரி விதிப்புகள் ஏதுமில்லை
பச்சைப் பாம்புகளும் மஞ்சள் பாம்புகளும்
ஒரே மரத்தில் வாசம்
புலிகளும்   எலிகளும்
ஒரே குட்டையில் நீர்குடிக்க... 
-நெறிப்படுத்த  எவருமின்றி 
பிரண்டைக்கொடியும் 
 சுண்டக்காய் செடியும்  
அண்டை வீட்டுக்காரர்  எனினும்
சண்டைகள்  ஏதுமில்லை
சாதிக்கொடுமைகளோ
இனக்கொடூரங்களோ...
இடமேயில்லை.
விலங்குரிமைமீறல் என்ற 
பதமேயில்லை 
 கை விலங்குகளுக்கு
அவசியமுமில்லை
ஆலமரம் தன் காலடியில் 
முகிழ்த்திட்ட புல்லை 
வருடி விட அனுப்புகிறது 
தன் விழுதுகளை 
கரும் பனை ஒன்று 
கட்டித்தளுவியபடி  ஓர் 
அரசமரத்தை -
நிற வேற்றுமைஎதுவுமின்றி
பெருமரம் ஒன்று தன் 
கிளைகளை- கிளிகளுக்கு
வாடகை   எதுவிமின்றி  
வசிப்பதற்காக...
பூச்செடி   தன் 
பூக்களில் பூக்கும் 
திரவியத்தை 
வண்டுகளுக்கு தந்தபடி -
வாதங்கள் எதுவிமின்றி 
நெடிது வளர்ந்திட்ட
ஓக் மர வேர்கள் 
சுமைகளைததாங்கி 
சுகமாய் - சுமைகூலியின்றி,
 சோகம் எதுவுமின்றி ... 
         
பிணைப்பின்றி -அத்துனையும்
 பிணைப்போடு .......
கவிஞர் ரெட்டவயல் எஸ் கிருஷ்ணசாமி    



























No comments:

Post a Comment